• RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter

தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 15-09-2014 அன்று தில்லி பல்கலைக் கழக கல்வியியல் பேராசியரும் முன்னாள் NCERT இயக்குனருமான திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் The Impact of Institutional Decay என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையின் தமிழாக்கம் பின்வருமாறு:

 இந்தியப் பட்டங்களும் அன்னியப் பட்டங்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதி தொடங்கி பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காக சென்று திரும்பி வந்த நிலையில் இந்திய சுதந்திரப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கும் தகுதிசால் கொண்டவராயிருந்த நிலை அடுத்த நூற்றாண்டு வரை கூட தொடர்ந்தது. காந்தியும், நேருவும் இங்கிலாந்திற்கும், அம்பேத்கர் மற்றும் ஜாகிர் ஹுசேன் தங்களுடைய ஆய்வியல் நிறைஞர் பட்டங்களுக்காக ஜெர்மனியும் சென்றனர். இன்றும் கூட திறன்மிகு இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்விக்காக கடல் தாண்டி, பின் எப்போதும் திரும்பி வராத நிலைதான் இருந்து வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டத்திற்கு அவ்வளவு கவர்ச்சியா? அதையும் தாண்டி உயர்ந்த வருமானம் தருகின்ற திருப்தியான கற்றல் அனுபவம் மற்றும் ஆய்வு சாத்தியங்கள் ஆகியவையே அவர்களை இந்தியாவிற்கு வெளியேயே நிலைபெறச் செய்கின்றன. வெளிநாட்டுப் பட்டங்கள் பெறுவதால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் மட்டுமன்றி, அத்தகைய பட்டங்கள் ஒருவருக்கு தரும் அனுபவங்கள் இந்தியப் பல்கலைக் கழகங்கள் தரும் அனுபவங்களை விட பெரிதும் வேறுபட்டு, மேம்பட்டதாய், திருப்தி அளிப்பதாய் இருப்பதே இத்தகைய போக்கிற்கு காரணம்.
காத்திருப்பின் அரசியல்
இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் அனைத்து நிலைகளிலும் நிலவி வந்த இடைவெளி 1980களில் குறுகி வந்தது போல தெரிந்தாலும், அடுத்த தசாப்தத்தில் மிகவும் பெரிதாகிப் போனது. ஏற்கனவே நிலை பெற்றிருந்த கொள்கைகள் புதிய ஆட்சியாளர்களால் உதறப்பட்டு ஒரு புதிய லட்சியம் கையிலெடுக்கப் பட்டது. கனரக தொழிலை பொறுத்த வரை கோட்டா ராஜ்ஜியம் விலகி சுதந்திர மயமான போக்கிற்கு வழி வகுத்தாலும் கல்வி அமைப்பை பொறுத்த வரை பழைய லைசென்ஸ் ராஜ்ஜியமே தொடர்ந்து தனியார் வணிகமயமாக்கலை ஒழுங்கு முறைக்கு உட்படுத்த முனைந்தது. ஆனால், இது படு தோல்வியிலும், மருத்துவம், பொறியியல், ஆசிரியர் தொழிற் பயிற்சி உள்ளிட்ட தொழில் முறை உயர் கல்வியில் ஊழல் பெருகவும் வழி வகுத்தது. 


நிறுவனச் சீரழிவு என்பது ஒட்டு மொத்த தேசத்திற்கே பொதுவானது என்றாலும் சீரழிவின் நுட்பங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. 700 பல்கலைக் கழகங்கள் உள்ள இந்த நாட்டில் ஒன்று கூட சர்வ தேச அளவில் சிறந்தது என்று கொண்டாடப் படவில்லை என்பது வருத்தமான செய்தி. அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, ஜப்பானிய பல்கலைக் கழகங்கள் மட்டுமல்ல, மலேசிய, சீன மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவும் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்ற நிலையில் அத்தகைய பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பது ஒரு தேசிய அவமானமாகவே பார்க்கப் பட வேண்டும். ஆனால், அது மட்டுமல்ல செய்தி. நாம் உண்மையிலேயே வருத்தப் படுவது இத்தகைய நிறுவனச் சீரழிவு வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரின் மீது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பற்றியது. தன்னுள் மறைந்திருக்கும் ஒரு அம்பேத்கரையோ, ஒரு ராமனுஜத்தையோ அல்லது ஒரு ஜகதீஷ் சந்திர போசையோ கண்டுபிடித்து வளர்த்தெடுக்க ஒரு இந்திய மாணவனுக்கு ஐரோப்பிய அல்லது அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றின் உதவி தேவைப்படுகிறது. ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு மகா அறிஞனாக டாக்டர் பட்டம் முடித்த நிலையில் ஒரு மாணவன் இந்தியாவிற்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் கூட, நாடு திரும்பியவுடன் அவனது முதல் கவலை பல்கலைக் கழக மானியக் குழுவால் வருடம் இரண்டு முறை நடத்தப் படும் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதாகத்தான் இருக்கும். இந்தத் தேர்வு பல புத்தகங்களில் காணப் படுபவைகளை புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்ய ஒருவனை கட்டாயப் படுத்துவதை விட வேறு என்ன செய்கிறது? இந்தத் தேர்வில் ஒருவன் தகுதி பெறுவதுதான் விரிவுரையாளர் / உதவிப் பேராசிரியர் பணிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனையாகும். அப்படியே அறிஞனாக திரும்பி வந்த அந்த மாணவன் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட, இந்திய கல்லூரிகளிலோ உயர் கல்வி நிறுவனங்களிலோ ஒரு உதவி பேராசிரியர் பதவி பெறுவதென்பது அவன் எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சவால். ஒருவேளை அவன் ஒரு தற்காலிக வேலையைப் பெற்று அதற்காக ஒரு மிகக் குறைந்த தொகுப்பூதியம் பெற்று எந்த உரிமையும் கௌரவமும் அற்று வாழ வேண்டிய நிலை வரும். இவர்களுடைய பணி ஒப்பந்தம் ஒவ்வொரு நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புத்தாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதால் தங்களது பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டியதின் காரணமாக அவர்கள் தங்களுடைய கருத்துக்களை பேராசிரியர் சபைகளில் சுதந்திரமாக வெளியிட முடியாது. நிரந்தமாக்கப் பட்ட பணியாளர்களை விட, மிக அதிக அளவிலான பணிச் சுமைகளை இவர்கள் ஏற்க வேண்டி நேர்ந்திருப்பினும், நிறுவனங்களின் நூலகங்களை பயன்படுத்தவோ அல்லது அப்படி அந்த நூலகங்களிலிருந்து சில புத்தகங்களை தங்களுடைய பணியின் காரணமாக கடன் பெற வேண்டிவரின், தங்களால் முடியாத மிகப் பெரிய தொகையை இட்டு வைப்பாக அந்நூலகங்களுக்கு செலுத்த வேண்டியதாகிறது. அசாத்தியமான மனத் துயரம் தரும் இத்தகைய உதவிப் பேராசிரியர் மன நிலை வருடக் கணக்கில் தொடர்வதால் ஒரு நம்பிக்கையான இளைஞன் அதை முற்றிலும் இழந்து எதையுமே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மனப் பிறழ்ச்சி நிலைக்கு ஆளாகிறான். இதை "காத்திருப்பின் அரசியல்" என்று குறிப்பிடும் திரு.கிரக் ஜெப்ரி தனது புத்தகத்தில் இந்தியாவில் படித்தவர் வேலையற்று இருக்கும் நிலை சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்துகின்ற ஒன்று என்று குறிப்பிடுகிறார்.
பறிக்கப்பட்ட கெளரவம்
இத்தகைய பரிதாபமான நிலையில் கல்லூரிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் பணி புரியும் உதவிப் பேராசிரியர்கள் "தற்காலிக, குறிப்பிட்ட கால, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் கௌரவ" என்ற நிலைகளில் பணிபுரிகின்றனர். தங்களது பணி நிரந்தமாக்கப் படுவதை அவர்கள் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட, பெரிய அளவில் பணியமர்த்துதல் என்பது இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களில் அண்மைக் காலத்தில் நடைபெறவே இல்லை. ஒரு இந்தியப் பல்கலைக் கழகத்தில் நிரந்தர பணி பெறுவது என்பது மிகவும் சிக்கலான சில காரிய காரணிகளை உள்ளடக்கியதாகும். அந்த விண்ணப்பதாரருக்கு அரசியல் சக்தி கொண்டோர் ஆதரவளித்தல், சமூக சக்திகளின் தொடர்பு, நல்ல பொருளாதார பின்புலம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவைகளை பொறுத்த விடயம் இது. மட்டுமன்றி, பல்கலைக் கழக மானியக் குழு வேறு சில தரப் புள்ளிகளை வற்புறுத்துகிறது. உங்களுடைய ஆய்வுக் கட்டுரை சர்வ தேச தரத்திலான ஆய்வு இதழ்களில் பதிப்பிக்கப் பட்டிருப்பினும் சரி, அல்லது யாருமே அறியாத சிறிதும் தரமற்ற புனைவான ஆய்வு இதழ்களில் வெளியிடப் பட்டதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஒரே விதமான தரப் புள்ளிகள்தான். இதே அளவுகோல்தான் "ஆய்வரங்கங்களில் பங்கெடுத்தல்" என்பதிலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தகைய பணியமர்த்தல்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்றல் என்பதைப் பற்றிய கூச்சல்களும், கூப்பாடுகளும் இரைந்திருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கப் படுவதும் பணியமர்த்தப் படுவதும் லௌகீகமான விடயங்கள் சம்பந்தப் பட்டது. இத்தகைய நேர்வுகளில் நீதிமன்றங்கள் அடிக்கடி அணுகப்பட்டு, தடையாணைகள் பெறப்படுவதும் வாடிக்கையான நிகழ்வுகள். கௌரவமிக்க இத்தகைய பணி நிலைகளுக்கு பணியமர்த்தப் படுவதிலும், தேர்ந்தெடுக்கப் படுவதிலும் நிறைந்துள்ள தொந்தரவுகள், தாமதங்கள் ஆயிரக்கணக்கான நமது இளைஞர்களின் எதிர்கால வாழ்வையே குலைத்துப் போடுகின்றன. தனி மனிதர்கள் மட்டுமன்றி நூற்றுக் கணக்கில் பல்கலைக் கழகங்களும், ஆயிரக் கணக்கில் கல்லூரிகளும் இத்தகைய போக்குகளால் முற்றிலும் சிதிலமடைந்து விட்டன.
 ஆட்குறைப்பு போக்கு
உயர் கல்வி நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் நிரந்தர பணியாளர்களை ஆட்குறைப்பு செய்கின்ற போக்கு 1990களின் ஆரம்ப வருடங்களில் துவங்கின. இதற்கு பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுவது பொருளாதார சீர்திருத்தங்கள். ஐந்தாவது சம்பளக் குழு பணியிடங்களை பெருவாரியாக குறைத்திடல் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக பிரகடனம் செய்ததற்கு வெகுகாலம் முன்னமேயே பல மாநிலங்களில் ஆசிரிய பணியிடங்களை நிரப்புவது என்பது முற்றாக நிறுத்தப்பட்டோ அல்லது சூறாவளி மாற்றங்களுக்கோ உள்ளாகியது. இத்தகைய போக்கிற்கு ஈடு கட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்துவதும், ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களை வெகுவாக குறைப்பதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வழிகளாக கருதப்பட்டது. குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பற்ற ஆசிரியர்கள் பெருமளவு நியமிக்கப் பட்டது எதிரெதிர் அரசியல் கட்சிகளுக்கும் பல்கலைக்கழக சங்கத் தலைவர்களுக்கும் பெரிய சௌகர்யத்தை அளித்தது. வட இந்தியாவில் இத்தகைய இரண்டு போக்குகளும் பெருமளவு காணப் பட்டன. 1993ம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி விரிவுரையாளர்களே நியமிக்கப் படவில்லை. பல புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப் பட்டாலும் கூட, அவைகள் தற்காலிக பணி நிலை ஆசிரியர்களாலேயே நடத்தப் பட்டு வந்தன. உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இப்போக்கை பின் தொடர்ந்தன. மூன்றாண்டு பட்டப் படிப்பை நான்காவது ஆண்டுக்கு நீட்டித்தும், நிரந்தரப் பணியமர்த்தல்களுக்கு தடை விதித்தும் இரண்டு முரண்பட்ட காரியங்களை ஒரே நேரத்தில் தில்லி பல்கலைக் கழகம் சாதித்துக் காட்டியது. தில்லியில் மட்டும் 4000-க்கும் மேற்பட்ட தற்காலிக பணி நிலை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். பள்ளி அளவில் கூட தில்லியில் தற்சமயம் 20,000க்கும் மேலான தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். ஆனால், ஆசிரியர் பணி நிலையை கேவலப் படுத்துவதில் மத்தியப் பிரதேசம் மற்ற எல்லா மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டது. 1990ம் ஆண்டிற்கு முன்பு பணியமர்த்தப் பட்ட ஆசிரியர்கள் அனைவரும் "அருகி வரும் பணிநிலை" என்று அறிவிக்கப்பட்டு, மிக சொற்ப சம்பளம் பெறும் தொகுப்பூதிய ஆசிரியர்களை அனைத்து நிலைகளிலும் அம்மாநில அரசு நிரப்பியிருக்கிறது. அரசியல் மாற்றங்கள் இத்தகைய பரிதாபமான நிலையை மாற்றும் என்ற நம்பிக்கை துவக்கத்தில் தெரிந்தாலும் நாளடைவில் அது முற்றிலும் அற்றுப் போய் விட்டது. அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு பெயர் போன மத்தியப் பிரதேசம் தற்போது கற்பழிப்பு வழக்குகளுக்கு தேசத்திலேயே முன்னோடியான தகுதியைப் பெற்றிருப்பது காலத்தின் கொடுமை.
பண்பாட்டு பெருமை
கல்வி பண்பாட்டு பெருமையைக் குறிக்கிறது. இத்தகைய பண்பாட்டு பெருமை எண்ணங்களை பரிவர்த்தனை செய்து கொள்வதிலே வளர்ந்து வந்த பாரம்பரியம், வாசிக்கும் பழக்கம் மற்றும் பல்வேறு படைப்பூக்க செயற்பாடுகளை உள்ளடக்கியது. இத்தகையதோர் பண்பாட்டு தொன்மைக்கு திருப்தியான, மகிழ்ச்சி கரமான ஆசிரியர்கள் இன்றியமையாதவர்கள். ஆசிரியர்களை கேவலப்படுத்துவதின் மூலம் தனது பண்பாட்டு பெருமையை இந்தியா சிதறடித்து விட்டது. நூலகங்கள் சீரழிந்ததிலும் இதற்கு பெரும் பங்கு உண்டு. நமது பள்ளிகளில் பெரும்பாலானவை நூலகங்களை கொண்டிருக்கவில்லை என்றாலும் பல கல்லூரிகளில் பெருமைமிக்க நூலகங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மதிப்பீட்டு ஆய்வின் போது அலகாபாத் எவின் கிறிஸ்டியன் கல்லூரிக்கு சென்ற நான் சீரழிந்து நின்ற அதன் நூலகத்தை கண்டு திகிலுற்றேன். அதன் பழைய பொக்கிஷங்கள் அறைகளில் வைத்து பூட்டப் பட்டுவிட்டன. பாடப் பகுதிகளின் விளக்க உரை புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் அணுக முடிந்ததாக இருந்தன. பொது நூலகங்களுக்கும் இதே கதிதான். 
 பாதிக்கும் மேலான நிரந்தரப் பணியாளர் இடங்கள் காலியாக கிடப்பதால் பழம் பெருமை வாய்ந்த தில்லி பொது நூலகமும் தனது புகழை இழந்து நிற்கிறது. இந்தியப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் நூலகங்களுக்கு அளித்து வந்த முன்னுரிமையை தொடர தவறி விட்டன. எந்தவித தொலை நோக்கும் இல்லாத அதிரடி அதிகாரிகள் நூலகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இணையம் சார் அறிவு சேகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டனர். இத்தகைய அறிவு வளங்கள் இன்றியமையாதவை என்றாலும், ஒரு நூலகம் தன்னகத்தே கொண்டிருக்கும் அறிவு சார் தொன்மையை எப்பொழுதும் இவை எட்டிப் பிடிக்க முடியாது. கல்வியில் நம்மை முந்தி நிற்கும் சமூகங்களை நோக்கும்பொழுது, அவை நூலகங்களுக்கு தம் அமைப்பில் வழங்கியிருக்கும் சிறப்பான இடமும் அறிவு சார் சமூகம் ஒன்றில் தம் குழந்தைகளை கொண்டு சேர்க்கும் ஆர்வமும் புலப்படும். 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நடுவண் அரசு இந்த நாட்டின் கல்வி நிலையை மேம்படுத்த முன்வருமானால், அது முதலில் செய்ய வேண்டியது நிறுவனங்களை மீட்டெடுப்பதாகும். இதைச் செய்த பிறகு மற்ற எந்த சீர்திருத்தமும் செய்து கொள்ளலாம். கிண்டர்கார்டென் தொடங்கி அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிப்பது பல்கலைக் கழகங்களும் பட்டக் கல்லூரிகளும்தான். வேலைக்கு ஆள் அமர்த்தாமை என்பது ஒரு கலாச்சாரமாகவே இன்று பரவி விட்டது. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் அவைகளின் திறன் பெரிதும் மங்கி விட்டது. வசதி மிக்க தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்றவைகளிலும் கூட வர்த்தகம் மற்றும் அரசியல் குறுக்கீடுகள் கல்வியின் தரத்தை மிகவும் சேதப்படுத்தியிருக்கின்றன. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் விடுவதிலும் அல்லது அவைகளை குறைந்த சம்பளம் கொண்டு தற்காலிகமாக நிரப்புவதிலும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை ஒழித்துக் கட்டுவதிலும் அரசின் பணம் மிச்சப்ப்படுமானால், இத்தகையதோர் சேமிப்பிற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுத்தேயாக வேண்டும். இப்படியான சேமிப்பால் இந்தியா பெற்றதுதான் என்ன? குழந்தைகளுக்கான சேவை என்பதிலே சிறிது திறன் கொண்டிருந்த அமைப்பு ஒன்றினையும் இந்த சிக்கன நடவடிக்கை முற்றிலும் சிதைத்து விட்டது. 


யாரின் பெயரால் ஆசிரியர் தினத்தை நாம் கொண்டாடுகிறோமோ அவர் - டாக்டர் ராதாகிருஷ்ணன் - இன்று உயிரோடு இருப்பாரேயானால் இந்த தேசம் ஆசிரியர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை கண்டுணர்ந்து மிகவும் குழம்பியிருப்பார் என்பது நிச்சயம்.

at 12:50 AM Posted by Prabhu 0 Comments

மனிதன் மட்டும்தான் பேசுகிறான்.  வேறு எந்த ஜந்துவிற்கும் இந்தத் திராணி இல்லை.  பேசுவதற்கு தனது கூட்டத்திற்குள்ளேயே ஒலிக் குறியீடு ஒன்றை பொதுவாகத் தீர்மானித்துக் கொண்டதின் பின், கால ஓட்டம் மொழியைக் கொண்டு வந்தது. அறிவிற்கான துறைகளையும் மனதிற்கான துறைகளையும் வளர்த்துக் கொண்ட மனித ஜாதி, இவைகளின் வழியே தனது கனவுகளுக்கு நிஜ வடிவம் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது மட்டுமன்றி, தான் சார்ந்த சமூகத்தோடு உறவாடுவதில் விளையும் இன்ப துன்பங்கள், சிக்கல்கள், தீர்வுகள் போன்றவற்றையும் பிரதியாக்குவத்தின் மூலம் தீர்த்துப்போட முயன்றது.  இலக்கியம், இசை போன்ற நுண்கலைகள் இப்படித்தான் பிறந்திருக்க வேண்டும். 
 
பிறந்த ஒன்றுக்கு வரலாறு உண்டு.  ஜாதகம் உண்டா? பிறந்த கணம் ஜென்மத்தின் தன்மைகளை மாற்றி விட முடியுமா?  இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை ஜாதகத்தை எழுதுவது யார்?  படைப்புக் கர்த்தாவா, விமர்சனக்காரனா? படைப்பாளியின் தொடர் ஆக்கங்களில் அவனது படைப்புலகையும் அதன் சாரத்தையும் அறிந்து கொள்ள முடியுமா?  படைப்பாளி என்பவன் மரபின் தொடர்ச்சியா?  அல்லது நெடிய மரபொன்றின் புதிய மீறலா?  படைப்பாளி இலக்கியத்தோடு மட்டும் எப்பொழுதும் சம்பந்தப்பட்டவனாக இருக்கிறானா?  வேறு அறிவுத் துறைகள் அவனது படைப்பாக்கத்தின் மீது செலுத்தும் ஆளுமையின் விளைவு படைப்பை எவ்விதம் பாதிக்கிறது?  படைப்பு எழுத்தாளனின் வெளிப்படுத்தலா அல்லது தப்பித்தலா? ஒன்றின் கர்த்தாவானவன் தனியனா அல்லது சுற்றியிருக்கும் அறிவுலகின் குழந்தையா?  இவன் சமூகத்தைப் பாதிப்பதும் சமூகன் இவனைப் பாதிப்பதும் படைப்பில் புலனாகிறதா?  இவனது எழுத்து எதோ ஒரு ‘இசம்’ சம்பந்தப்பட்டதா அல்லது எந்த ஒரு அறிவியக்கத்தைப் பற்றியும் பிரக்ஞையோ கவலையோ இல்லாது “உள்ளே நிகழும் அசௌகர்யத்தால்” பீறீட்டவையா? ஒரு படைப்பாளிக்கு அவனது மொழியின் இலக்கிய மரபும் உலக இலக்கிய மரபும் பலவீனமா, சௌகர்யமா?  செவ்வியல் இலக்கியப் பிரதிகளில் வரும் “உதாரண” மாந்தர்களை இவன் தனது படைப்பில் புத்துயிராக்கம் செய்வது மரபா, தவிர்க்க முடியாத கட்டாயமா?  கலைஞன் ஒருவன் எப்பொழுதுமே எழுதிக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா?  ஊனத்தை நிராகரிக்க எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருப்பதுதான் ஒரே மாற்றா?  செவ்வியல் பிரதிகள் மையப்படுத்தும் அறம் நவீன கதையாடல்களில் தன்னை எவ்விதம் வெளிப்படுத்திக் கொள்கிறது?  காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாறிக் கொள்வது அறமா?  காவியங்களின் பொதுத் தன்மை, எம்மொழியில் காவியப் பிரதி இருப்பினும், இந்த ‘அறம்’ எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றியதுதானா?  காலத்தை வென்று நிற்பதால் மட்டுமே ஒரு இலக்கியப் பிரதிக்கு ‘செவ்வியல்’ தன்மை வந்துவிடுகிறதா? 

படைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் வாசிப்பு-வாசகன் ஆகிய கூறுகளின் பங்கு என்ன?  படைப்பு வாசகனிடம் முடிகிறதா, பிறக்கிறதா? படைப்பாளியின் படைப்பு மனம் படைப்போடு அது முடிந்த நிலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதா?  எது அவனது படைப்புலகின் சாரத்தை முடிவு செய்கிறது?  படைப்பாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான – பல நேரங்களில் ஒருவருக்கொருவர் எதிரெதிரான – படைப்புச் சூட்சுமங்களைத் தாங்கி நிற்பதற்கு எது காரணம்?  படைப்பின் ரகசியத்தை அறிவியலால் புரிந்து கொள்ளவே முடியாதா?  உள்மனதின் பரிமாணங்களை படைப்பாக வெளிப்படுத்தும் கலைமனதின் கட்டுமானத்தைத் தீர்மானிப்பது கலைஞன் பெரும் புறவயமான அனுபவங்கள் மட்டும்தானா?  எழுச்சிமிகு எழுத்துக்கள், தட்டையான எழுத்துக்கள், பூடகமானவை, மேலதிக அறிவுசார்பானவை, எளிமையான கிராம மக்களின் அன்றாட வாழ்வை அதே சுவாராஸ்யங்களோடு பிரதியில் கொண்டு வரும் படைப்பு மனம், மர்மமான எழுத்து, இன்னும் என்னன்னவோ மாதிரியான எழுத்துக்கள் – இவை எல்லாவற்றுக்கும் ஊற்று ஒன்றுதானா?

விமர்சனக்காரர்களின் தீர்ப்புரைகள் தவிர, படைப்பைப் பற்றி படைத்தவன் சொல்ல ஏதேனும் உள்ளதா? குறைந்தபட்சம், தனது படைப்புலகம் எதைவேண்டி தன்னால் ஒரு கால நீச்சியில் கட்டப்பட்டு வருகிறது என்பதை கலைஞன் அறிந்துள்ளானா? படைப்பனுபவம் அவனுக்குத் தருவது என்ன?  எழுதுவது அவன் திட்டமிடுதலின் விளைவா அல்லது உணரும் அவஸ்தையின் வெளிப்பாடா?  படைப்பாளி ஏன் எழுதுகிறான்?  அறிவியக்கங்கள் அவனது படைப்பு மீது செலுத்தும் அதிகாரத்தை எந்த அளவு வரை அனுமதிக்கிறான்?
இதைப் போன்ற இன்னும் நூறு வினாக்களுக்கு ஜெயமோகன், சூத்ரதாரி, வேதசகாயகுமார் ஆகியோர் சேர்ந்து, பனிரெண்டு குறிப்பிடத்தக்க தென்னிந்திய இலக்கிய ஆளுமைகளிடம் பெற்றிருக்கும் நேர்காணல்களின் தொகுப்பான “இலக்கிய உரையாடல்கள்” பதில் தர முயற்சிக்கிறது.    பதில் தர முயற்சிக்கிறது என்பதை விடவும், இவை பற்றியெல்லாம் உரக்கப் பேசுகிறது, அப்படிப் பேசுவதின் மூலம் பொதுவெளியில் இதைப் பற்றி அக்கறை கொண்டோர் சிந்திக்கவும் விவாதிக்கவும் அரிய கருப்பொருட்களை அனுமதிக்கிறது எனலாம்.  படைப்பாளி ஒருவன் தன்னுடைய எல்லாவற்றையும் படைப்பில் கொண்டுவர முடிவதில்லை.  எவ்வளவு சொல்லியும், விடுபட்டவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.  படைப்பாளியை விட, அந்த விடுபட்டவைகளை வாசகன் எளிதில் இனம் கண்டு கொள்கிறான்.  அவைகளைப் பற்றிய அர்த்தம் நிறைந்த சம்பாஷனை ஒன்றைத் துவக்கும் வாசகனோடு கலந்துகொண்டு, மிகுதியான விளக்கங்களை அளிப்பதின் மூலம் தனது படைப்பு மனதில் சொல்லாமல் நின்றவைகளை படைப்பாளியால் முன்னிலைப்படுத்த முடிகிறது.
 

படைப்பு, படைப்பனுபவம், வாசிப்பு, வாசிப்புலகம் ஆகியவை இத்தகைய சம்பாஷனைகள் மூலம் தங்களது மர்மங்களைத் தாங்களே விளங்கிக் கொள்ள முயல்வதுடன், இவ்வுலகில் தங்களுடைய தவிர்க்கவொண்ணா இருப்பையும் தரப்பினையும் உணர்த்துகின்றன. 
 

நித்யசைதன்ய யதி, கே.சச்சிதானந்தன், டி.ஆர்.நாகராஜ், பேராசிரியர் ஜேசுதாசன், நா.மம்மது, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், நீல பத்மநாபன், அ.முத்துலிங்கம், பாவண்ணன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்ட பெரும் ஆளுமைகள்.

விஷய கனமான புத்தகம்.  தொடர்ந்து படிப்பதைவிட, கேள்வி கேள்வியாக படித்து, வினா-விடை இரண்டின் உட்கிடக்கைகளையும் புரிதலுற்றபின், முன் நகர்வது இந்நூலுக்கான வாசிப்பு முறையாகும்.  இதைப் போன்ற விவாதங்கள் ஏராளமாக தொடர்ந்து நடைபெறுவதற்கான தேவையும் நியாயமும் இன்றைய தமிழ் நவீன இலக்கியச் சூழலில் உள்ளது. 
 

[என் இந்தியன் பதிப்பகம், சென்னை, திசம்பர் 2006, உரூபா 150/-]   

.