• RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter

ஷேக்ஸ்பியர் பிறந்தாரா?
ஷேக்ஸ்பியர் என்ற மனிதர், அவர் வாழ்வைப் பற்றி கிடைக்கிற சித்திரம் எல்லாமே சந்தேகத்திற்கிடமானதே. இன்னும் சிலர், இவர்தான் இவர் பெயரில் கிடைக்கும் நாடகங்களை எழுதியவரா என்று தீவிரமாக சந்தேகிக்கின்றனர். முற்றிலும் உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி, வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் 1564-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி ஸ்ட்ராட்ஃபோர்ட் என்ற இடத்தில் ஜனித்தார். இவருடைய தந்தை ஒரு வியாபாரி. தாய் மேரி ஒரு விவசாயக் குடும்பத்துக்காரி.

ஒரு குடும்பம் ஒரு கதை
இவரைப் பற்றிய சுவராஸ்யம் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது. தனக்கு 18 வயதே நிரம்பிய நிலையில், 1582-ம் ஆண்டு, தன்னை விட எட்டு வயது மூத்த ஆன் ஹாத்வே என்ற பெண்ணை மணக்கிறார். மூன்று மகவுகள். அதில், இரண்டு பெண்கள், ஒன்று ஆண். முதல் மகள் சூசன்னா. ஒரே மகனான ஹாம்னெட் பதினோரு வயதான போது இறந்துபோனதாக பதிவு உண்டு.

ஷேக்ஸ்பியர் இருந்தாரா?
திருமணத்திற்கு பிறகான இவரது வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் தெளிவாக இல்லை. ஆனால், லண்டனுக்கு குடியேறியிருக்கலாம், அங்கே நாடகங்கள் எழுதத் துவங்கியிருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. லண்டனில் இருந்த காலத்தில் இவர் தனியாக இருந்தார் என்ற பதிவுகள் நிரம்ப இருக்கின்றன. குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கிறார். லண்டனில் இருந்த அனைத்து நாடக அரங்குகளும் மூடப்பட்டிருக்கும் Lent நாட்களில் இவர் வீட்டிற்கு சென்று வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவருடைய காதல் பாட்டுக்கள் [sonnets] 1590 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். இவருடைய படைப்பாக்க காலத்தை நோக்குங்கால், ஒரு சமயத்தில் தீவிரமாக எழுதித் தள்ளியிருக்கிறார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத எழுத்து. ஒரு படைப்பாளிக்கு பொதுவாக லௌகீக குணாம்சம் இராது. இவர் விதிவிலக்கானவர். நாடகங்கள் மூலமாக தான் பெற்ற செல்வத்தை சாதுர்யமாக லாபம் கொடுக்கும் முதலீடுகளில் இட்டுவைத்திருக்கிறார். இந்த மாதிரி விடயங்களில் யாரோ இவருக்கு உதவியிருக்கலாம். நமது சிவாஜி கணேசனுக்கு அவர் தம்பி ஷண்முகம் இருந்ததைப் போல. கி.பி.1605 வாக்கில் ஸ்ட்ராட்ஃபோர்ட் கிராமத்திற்கு அருகே இவர் வாங்கிய நிலபுலன்கள் விரைவிலேயே இரண்டு மடங்கு லாபம் கொடுத்ததாக செய்திகள் உண்டு.

ஷேக்ஸ்பியர் படைத்தாரா?
இவரின் சமகாலத்தியவர்களில் சிலர் ஒக்ஸ்போர்ட் சர்வகலா சாலையைச் சேர்ந்தவர்கள். பொறாமையா, உண்மையா தெரியாது. ஷேக்ஸ்பியர் எந்த நாடகங்களையும் எழுதவில்லை, உண்மையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த Edward de Vere என்பார்தான் எழுதினார் என்று அடித்துச் சொன்னார்கள். ஷேக்ஸ்பியர் ஒரு வணிகர் மட்டுமே என்று நிறுவ முயற்சிகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால், Ben Johnson மற்றும் Robert Greene போன்ற பெரும் இலக்கிய ஆளுமைகள் தங்களது விமர்சனங்களில் ஷேக்ஸ்பியரை திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.

ஷேக்ஸ்பியர் படைப்புலகத்தில் கவிதைக்கு என்ன இடம்?
150 கவிதைகள். sonnet வகையைச் சார்ந்தவை. பெரும்பாலும் காதல் கவிதைகள். அதிலே பல கவிதைகள் காலத்தை வென்று விட்டன என்ற மிக எளிதாகச் சொல்லலாம். கவிதைகளிலே குறிப்பிடப்படும் அந்தப் பெண் யார் என்பது பற்றி தனியாக ஒரு பெரிய விமர்சனக் குழு சில நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. அது ஒரு பெண்ணைப் பற்றியல்ல; ஷேக்ஸ்பியர் ஓரினச் சேர்க்கையாளர். அவர் கவிதைகளில் ஏக்கமாக குறிப்பிடுவது அந்த ஆண் நண்பரைத்தான் என்ற இரைச்சலும் ஷேக்ஸ்பியரைப் பற்றி படிக்கையில் கேட்டாக வேண்டும்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
ஆங்கில மொழி மட்டுமல்லாது, உலகத்தின் எந்த மொழியிலும் அதிகம் பார்க்கப் பட்டதும், படிக்கப் பட்டதும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்தான் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளலாம். உலகத்தின் பெரும்பாலான மொழிகளில் இவைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் சமகாலத்தவரோடு ஒப்பு நோக்கையில், இவர் பல்திறம் கொண்டவர். இன்பியல், துன்பியல் மற்றும் வரலாற்று நாடகங்களை ஒரே மாதிரியான நேர்த்தியில் எழுதியிருக்கிறார். இந்த versatility மற்றவரிடம் பார்க்கக் கூடுவதில்லை. ஜனரஞ்சகமும், செவ்வியல் தன்மையும் ஒரே நேரத்தில் இவரால் சாதிக்க முடிந்தவை. இயக்குனர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சேர்ந்த கலவைத் தன்மையை ஒரு இயக்குனர் ஒரே நேரத்தில் சாதிக்க முடிந்தால், அப்படிப்பட்ட ஒருவரை நாம் பார்த்து, வரலாற்றில் பின் நகர்ந்து ஷேக்ஸ்பியரை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஷேக்ஸ்பியர் இறந்தாரா?
ஷேக்ஸ்பியர் 1616-ம் ஆண்டு தனது 52 வயதில் மரித்தார். எதனால் இறந்தார் என்பது பற்றி சர்ச்சைகள் நிறைய உண்டு. குடிகாரனாக மாறிப்போன ஷேக்ஸ்பியர் மிதமிஞ்சி குடித்து குழிக்குப் போனார் என்ற செய்தியும் காற்றில் மிதக்கிறது.

இந்த செய்தியைப் போலவே, அவரின் ஆயிரமாயிரம் வரிகள் காற்றில் மிதந்து, துன்பம் நேர்ந்தவர்களுக்கு யாழெடுத்து இன்பம் சேர்த்துக் கொண்டேயிருக்கின்றன. இவரைக் காப்பியடித்து, எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நாடகங்களும், கதைகளும், சினிமாக்களும் தங்கள் கைகளிலும் யாழ் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு இன்பம் சேர்க்க முயன்று கொண்டிருப்பது இவருக்கு பெருமையே.


திரும்பிப் பார்க்கையிலே எப்பொழுதுமே ஒரு திருப்தி.  நடந்தது நல்லதோ இல்லையோ, அவையெல்லாம் முடிந்துவிட்ட சங்கதிகள். முடிந்துவிட்ட சங்கதிகளைப் பற்றி நமக்கு செய்ய ஏதுமில்லை.  நடந்து கொண்டிருப்பவைகளிலும், நடக்கப்போவைகளிலும்தான் எவ்வளவு மர்மங்கள்?  இந்த மர்மங்கள் தரும் தொடர்ந்த அவஸ்தைகளால் சல்லையுறும் இந்த மனது நடந்தவைகளை நினைவு கொண்டு ஆறுதலடைகிறது. எதிர்காலமே இறந்தகாலமாயிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்?  வாழ்க்கை போடும் எல்லா மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்த நிலை கடந்துபோன காலம்.

புனைவேதும் இல்லாமல் கடந்த காலத்தை நினைவு கூறுதல் ஆகுமா?  எந்த வித மனச் சார்பும் இன்றி நடந்ததை நடந்தவாறே நினைக்கக் கூடுமா நம்மால்?  முடியாதென்றுதான் தோன்றுகிறது.  சொல்லப்போனால், உண்மை என்பது இல்லை.  உண்மை கூட ஒரு அபிப்பிராயம்தானே?  நடந்ததை நடந்தவாறே சொல்லுகிறேன் என்பதெல்லாம் சும்மா.  நடந்ததை உணர்ந்தவாறு வேண்டுமானால் சொல்லலாம். உணர்ந்தவாறு சொல்வதில் வேண்டுமென்றே பொய்யைக் கலந்து சொல்லாமல் இருப்பதே அந்த கடந்த காலத்திற்கு நாம் காண்பிக்கும் விசுவாசம்.  ஆனால் புனைவுகளும் ஜோடனைகளும் எப்படியோ அபிப்பிராயத்தில் கலந்துவிடுகின்றன, நமக்குத் தெரியாமலேயே.  நீதிமன்ற மரக் கட்டகங்களிலே குற்றவாளியையோ, சாட்சியையோ நிறுத்தி, கடந்த காலத்தின் உண்மைகளை மட்டும் புனைவில்லாமலும், பொய்யில்லாமலும் அவர்களிடமிருந்து உரித்து எடுத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்துடன் கேள்விகளால் துளைக்கும் வழக்குரைஞர்கள் சர்க்கரையில் இருந்து இனிப்பைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் இருப்பதாகவே தோன்றும்.  நினைவும் புனைவும் எப்போதும் ஒன்றை ஒன்று புணர்ந்தபடியே உள்ளன.  நடந்த ஒன்றைப் பற்றிய உனது வாக்குமூலம் உன் உண்மை, இது அதன் பற்றிய என்னுடைய உண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.  உண்மையில், உலகம் பார்வைகளால் ஆனது.  எத்தனை பேர் இங்கு உள்ளனரோ அத்தனை உலகங்கள் உள்ளன.

சுய சரிதை எழுதுவோர் அனைவரும் தங்களுடைய முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே ஆரம்பிக்கின்றனர்.  பல உண்மைகளைச் சொல்லவில்லைஎன்றும், ஆனால் பெரும்பாலும் உண்மைகளை மட்டுமே சொல்லியிருப்பதாகவும் தங்களின் பாயிரத்தில் சொல்லுகின்றனர்.  தன்னுடைய சுய சரிதையான "என் கதை"-யில் நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளையவர்களும் இப்படியான  வாக்குமூலம் ஒன்றுடனே ஆரம்பிக்கிறார்.  இதில் இருக்கும் நிகழ்ச்சிகள் நடந்தவை என்றும், "ஆனால் ருசிக்கும்படியான முறையில் எழுதியிருக்கிற ஜோடிப்பு மட்டும் என்னுடையது" என்றும் கூறி, தன வாழ்க்கை கதையைத் தொடங்கும் பிள்ளையவர்கள் ஒரு மாபெரும் மானுடனின் கதையை பிரதி முழுதும் சுவைகுன்றாமல் சொல்லியிருக்கிறார்.  1888-ல் போலிஸ் ஏட்டுக்கு எட்டாவது குழந்தையாகவும், முதல் ஆண் குழந்தையாகவும் சேலம் ஜில்லாவின் தெற்குக் கோடியில் இருந்த மோகனூர் கிராமத்தில் பிறந்த பிள்ளையவர்கள் பிறவிக் கலைஞர்.  யாரும் சொல்லித் தராமல் சைத்ரீகம் கைக்குப் பழக்கமாகிறது.  எதையும் சித்திரமாகவே பார்க்கும் சிறுவன் ராமலிங்கம் மிகவும் செல்வாக்காக வளரும் பிள்ளை.  விரும்பியது பெரும்பாலும் உடனே கிடைக்கிறது.  

 சிறுவன் ராமலிங்கத்தின் பள்ளிப் படிப்பு முதல் தண்டி யாத்திரையின் தமிழ் நாட்டுப் பதிப்பான உப்பு ஊர்வலம் வரை, இவரின் கலையுள்ளமும் கவியுள்ளமும் நிறைந்து கிடக்கின்றன.  இன்னொன்று, இந்தக் கலையுள்ளத்திற்கான பயிற்சி எதையும் இவர் சிறப்பாகப் பெறவில்லை.  விரும்பியதை வரைகிறார்.  பொங்குவதை எழுதுகிறார்.  ஆங்கிலப் பயிற்சியும் உண்டு.  பள்ளியில் எல்லா வியாசப் பயிற்சிகளிலும் பாராட்டும்படியாக வந்த இவர், தன் சுயசரிதையில் தனித்துத் தெரிவது, பயன்படுத்தியிருக்கும் உரைநடையில்.  தனித் தமிழைத் தவிர்த்து, மணிப்பிரவாள  நடையில், காலக் கிரயப்படி எழுதாமல், காலத்தை முன் பின் நகர்த்தி, ஒவ்வொரு அத்தியாயமும் முழுமையடைந்த ஒன்றாக எழுதப்பட்டிருப்பது அன்றைய காலத்தில் மிகவும் நவீனமான முயற்சியாக அறியப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியுள்ள வாசகன் பிரதி முழுவதையும் படித்துவிட்டு தன் முயற்சியில் ஒருவாறு காலக் கிரயத்தை அவதானிக்க முடியும். 

"என் கதை" பிள்ளையவர்களின் குடும்பத்து கதையும் கூட.  இக்கதையின் தன்னிகரில்லா கதைமாந்தர் வெங்கட்ராம பிள்ளை - கவிஞரின் தந்தையார்.  இவர் தான் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி.  துரைமார்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் போலிஸ் ஏட்டு ஆன இவர் மகனின் மீது எல்லையற்ற பாசம் வைத்திருப்பவர்.  மகனுக்காக மறுகுபவர்.  தன் உறவுக்காரப் பெண் முத்தம்மாளை கவனிக்கும் இவர், இவள் தன் மகன் ராமலிங்கத்திற்கு சரியான ஜோடி என்று முடிவு செய்கிறார்.  இவருக்கும் முத்தம்மாளுக்குமிடையேயான உறவு நிலையை  அற்புதமாக ஒரு சினிமா கதாசிரியனுக்கே உரிய பாணியில் விவிரிக்கிறார் கவிஞர்.  தன் குழந்தைகளைவிட அதிக பாசமும் அன்பும் வைத்திருக்கும் முத்தம்மாளை தன் மகன் ராமலிங்கம் வெறுக்கிறான் என்பது அவருக்கு விழும் முதல் அடி. எதற்குமே வாழ்க்கையில் கலங்காத வெங்கட்ராம பிள்ளை மகன் முன் நின்று மன்றாடி கண் கலங்குகிறார்.  ஒரு பிரமிப்பான சினிமாவின் மிக முக்கியமான காட்சி போன்று பிரதியில் வெளிவந்திருக்கும் தருணம் இது.

பிரதி முழுக்க படித்த பிறகும் எதுவும் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ஆச்சர்யத்தின் மூலம், ஒரு கூர்த்த திரைக்கதைத் திட்டத்துடன் அத்தியாயங்கள் எழுதப்பட்டிருப்பதுதான்.  ஒவ்வொரு அத்தியாயமுமே ஒரு தனி மனிதனின் வாழ்வில் முக்கியமான காலகட்டத்தைப் பேசுகிறது.  தன்னுடைய மனைவி முத்தம்மாள்தான் கவிஞர் காதலித்த முதல் பெண்ணா?  அந்த சீதா இவருக்கு யார்?  சீதா இவரைப் பற்றி என்னதான் நினைத்தாள்?  தன் நண்பன் மண முடிப்பதாக இருந்த அவனின் முறைப் பெண்ணான சீதா, கவிஞரிடம் தன்னை மனதளவில் ஒப்படைத்திருந்தாளா? நண்பன் வெங்கடவரதனுக்கு சீதாவின் மேல் காதல் இருந்த நிலையில், சீதாவும் கவிஞரும் பழகியதை அவன் வெள்ளந்தியாக பாராட்டுகின்றானா, துரியோதனன்கள் இந்த நாட்டில் எப்போதுமே பிறந்து கர்ணன்களைப் புரிந்துகொண்ட வண்ணமே உள்ளனரா?  வாழ்வின் போக்கு திசை மாறி அடித்து, வெங்கடவரதனும் இல்லாமல், ராமலிங்கமும் இல்லாமல், எதோ ஓர் மைசூர் பணக்காரருக்கு வாழ்க்கைப்பட்டு,  உடனடியாக ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகளுக்கு தாயாகி, அவசரமாக விதவையாகி, பதினைந்து வருடத்தில் ராமேஸ்வர ரயில்வே பிளாட்ஃபாரத்தில் அகஸ்மாத்தாக ராமலிங்கத்தை கண்டுபிடிக்கும்  சீதா தன் வாழ்க்கையில் கண்டுபிடித்ததுதான் உண்மையில் என்ன?  நிராசையா?  1927-ல் சீதா செத்துப் போன செய்தி கவிஞருக்கு கிடைக்கும்போது, வாசகன் திக்கித்துப் போகிறான்.

கவிஞரின் வாழ்க்கை, ஒவ்வொருவருடையது போலவே, சுவராஸ்யங்கள் நிறைந்ததாக உள்ளது.   கவிஞரின் தாயார் பிடித்துத் தந்த இலுப்ப மர பேய், பேய் பிசாசுகளில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவைகள் உண்மையில் யார் என்று காட்டிக்கொடுப்பதாக உள்ளது.  இதற்கு சற்றும் சுவராஸ்யம் குறையாத இன்னொரு பகுதி மாணிக்கம் நாயக்கருடன் கவிஞர் டெல்லி, பெஷாவர், காசி போன்ற ஊர்களுக்கு பிரயாணம் செய்வது.  வட இந்திய பண்டாக்கள் என்றுமே மாறுவதில்லை என்பது இன்றும் காசிக்குப் பொய் வருகிற பிரயாணிகள் உணர்வார்கள்.

 அடுத்து, வாசகனுக்குப் பெரிய பிரமிப்பைத் தருவது, கவிஞர் சந்தித்து உறவாடும் இந்த தேசத்தின் ஆகப்பெரிய ஆளுமைகள்.  ஈரோடு ராமசாமி நாயக்கர், ராஜகோபாலச்சாரியார், காந்தியடிகள், சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, ஷண்முகம் செட்டியார், கிட்டப்பா போன்ற மாபெரும் ஆளுமைகளை பக்கத்தில் இருந்து பார்த்து பழகும் வாய்ப்பைப் பெற்ற கவிஞர், தானும் அந்த வரிசையிலேயே நின்று காட்சியளிக்கும்போது,  வாசகன் மகிழ்ந்து போகிறான்.

 இந்த சரிதையில் வாசகனைப் பெரிதும் கவருவது அனாவசியமாக வெளிப்பட்டிருக்கும் நேர்மை.  குழந்தை இல்லாத காரணத்தால், இரண்டாவதாக தன்னுடைய தங்கையையே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் மனைவி முத்தம்மாளிடம் கவிஞர் கேட்கிறார்: "சரி, எனக்குக் குழந்தையில்லை என்பதற்காக நான் இன்னொரு பெண்ணை கலியாணம் செய்து கொள்கிறேன். உனக்குக் குழந்தையில்லை என்பதற்காக நீ  இன்னொரு புருஷனைக் கலியாணம் செய்து கொள்கிறாயா?"  பிரதியின் இன்னொரு இடத்தில், காந்தியாரின் நேர்மையில் உவகை கொள்கிறான் வாசகன்.  ஏற்கனவே ஒப்புக்கொண்டு மக்களிடம் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருக்கிற கரூர், கோபி செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு உடல் நலம் பேரில் காந்தி வர மாட்டார் என்று ராஜாஜி கறாராக சொல்லிவிட, திகைத்துப் போகிறார் கரூர் காங்கிரஸ் பிரதிநிதியான கவிஞர்.  வாய்ப்பு கிடைத்ததும், காந்தியிடமே இதுபற்றி நேரடியாக கேட்கப்படுகிறது.  உடனடியாக, பயணத் திட்டத்தில் ஏற்பட்ட இத்தவறை நீக்கி கரூர் மற்றும் கோபிக்கு வருவதாக உறுதியளிக்கிறார் தேசத்தந்தை.

ஒரு நவீன நாவலுக்கு சற்றும் குறையாமல் வேகமெடுத்துப் பாயும் இந்த வரலாறு தனது கடைசிப் பக்கங்களில் கவிஞரின் வறுமையை சுய பச்சாதாபம் இல்லாமல் சொல்லிச் செல்கிறது.  கவிஞர் தன் இலக்கிய ஆளுமையின் உச்சத்தில் இருந்த காலமும் இதுவே.  திருக்குறளுக்கு பரிமேலழகர் உரைதான் லட்சியமானது என்பதனை கேள்விக்குள்ளாக்கும்  கவிஞர், அதற்கான மாற்று உரை எழுதும் பணியில் ஈடுபடுகிறார்.  காங்கிரஸ் சர்க்கார் பெரிதாக கவிஞருக்கு எதையும் செய்துவிடவில்லை, இரண்டொரு முறை ஜெயிலுக்குள் தள்ளியதைத் தவிர.  உதவ விரும்பும் நண்பர்களை விதி வழிமறிக்கிறது.  எல்லாவற்றையும் தன் பழைய வீட்டு மாடியில் இருந்து அவதானிக்கும் கிழவரான இந்த கவிஞர் யார் மீதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் தன் வறுமையை சொல்லுகிறபொழுது, கவிஞனாகவோ தேச பக்தனாகவோ நல்லவேளையாக நாம் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

இப்பிரதி முழுக்க நம்மை சுண்டியிழுப்பது கவிஞரின் ஆற்றொழுக்கான தமிழ் உரைநடை.  எந்தவித வர்ணமும் பூசப்படாத உரைநடை.  எளிமையைக் கூட சிலர் வரவழைப்பார்கள்.  இவரிடம் எளிமை இயல்பாக உள்ளது.  முற்று முழுவதுமாக இதைப் படித்து முடித்தவுடன் ஒரு Bildungsroman ரக நாவலை முடித்த திருப்தி.  இதன் இறுதிப் பக்கத்தில் பாரதியார் அதிகாலை வேளையில் பித்தர் போல பாடியதைக் கேட்ட கவிஞர், அவரின் வடிவத்தை சாயத்தில் வரைய ஆசைப்படுகிறார்.  ஆனால், அவருக்கு பாரதியாரின் உள்ளம்தான் முன் வருகிறது.  உருவம் வருவதில்லை.  பாரதியின் உள்ளமும் தெரியக்கூடிய அவரின் உருவத்தை விரைவில் அமைப்பதாக கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உறுதியளிக்கிறார். "என் கதை" படித்து முடித்த பிறகு, வாசகனுக்கு கவிஞரின் உருவம், உள்ளம் மட்டுமன்றி அவரின் வாழ்க்கை, தேசம் எல்லாமே காலத்தின் கல்லிடுக்குகளிலிருந்து சுரந்து மெல்ல தளும்பி மேலே வந்து கண்ணையும் கருத்தையும் நிறைக்கிறது.