• RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter

ஷேக்ஸ்பியர் பிறந்தாரா?
ஷேக்ஸ்பியர் என்ற மனிதர், அவர் வாழ்வைப் பற்றி கிடைக்கிற சித்திரம் எல்லாமே சந்தேகத்திற்கிடமானதே. இன்னும் சிலர், இவர்தான் இவர் பெயரில் கிடைக்கும் நாடகங்களை எழுதியவரா என்று தீவிரமாக சந்தேகிக்கின்றனர். முற்றிலும் உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி, வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் 1564-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி ஸ்ட்ராட்ஃபோர்ட் என்ற இடத்தில் ஜனித்தார். இவருடைய தந்தை ஒரு வியாபாரி. தாய் மேரி ஒரு விவசாயக் குடும்பத்துக்காரி.

ஒரு குடும்பம் ஒரு கதை
இவரைப் பற்றிய சுவராஸ்யம் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது. தனக்கு 18 வயதே நிரம்பிய நிலையில், 1582-ம் ஆண்டு, தன்னை விட எட்டு வயது மூத்த ஆன் ஹாத்வே என்ற பெண்ணை மணக்கிறார். மூன்று மகவுகள். அதில், இரண்டு பெண்கள், ஒன்று ஆண். முதல் மகள் சூசன்னா. ஒரே மகனான ஹாம்னெட் பதினோரு வயதான போது இறந்துபோனதாக பதிவு உண்டு.

ஷேக்ஸ்பியர் இருந்தாரா?
திருமணத்திற்கு பிறகான இவரது வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் தெளிவாக இல்லை. ஆனால், லண்டனுக்கு குடியேறியிருக்கலாம், அங்கே நாடகங்கள் எழுதத் துவங்கியிருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. லண்டனில் இருந்த காலத்தில் இவர் தனியாக இருந்தார் என்ற பதிவுகள் நிரம்ப இருக்கின்றன. குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கிறார். லண்டனில் இருந்த அனைத்து நாடக அரங்குகளும் மூடப்பட்டிருக்கும் Lent நாட்களில் இவர் வீட்டிற்கு சென்று வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவருடைய காதல் பாட்டுக்கள் [sonnets] 1590 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். இவருடைய படைப்பாக்க காலத்தை நோக்குங்கால், ஒரு சமயத்தில் தீவிரமாக எழுதித் தள்ளியிருக்கிறார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத எழுத்து. ஒரு படைப்பாளிக்கு பொதுவாக லௌகீக குணாம்சம் இராது. இவர் விதிவிலக்கானவர். நாடகங்கள் மூலமாக தான் பெற்ற செல்வத்தை சாதுர்யமாக லாபம் கொடுக்கும் முதலீடுகளில் இட்டுவைத்திருக்கிறார். இந்த மாதிரி விடயங்களில் யாரோ இவருக்கு உதவியிருக்கலாம். நமது சிவாஜி கணேசனுக்கு அவர் தம்பி ஷண்முகம் இருந்ததைப் போல. கி.பி.1605 வாக்கில் ஸ்ட்ராட்ஃபோர்ட் கிராமத்திற்கு அருகே இவர் வாங்கிய நிலபுலன்கள் விரைவிலேயே இரண்டு மடங்கு லாபம் கொடுத்ததாக செய்திகள் உண்டு.

ஷேக்ஸ்பியர் படைத்தாரா?
இவரின் சமகாலத்தியவர்களில் சிலர் ஒக்ஸ்போர்ட் சர்வகலா சாலையைச் சேர்ந்தவர்கள். பொறாமையா, உண்மையா தெரியாது. ஷேக்ஸ்பியர் எந்த நாடகங்களையும் எழுதவில்லை, உண்மையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த Edward de Vere என்பார்தான் எழுதினார் என்று அடித்துச் சொன்னார்கள். ஷேக்ஸ்பியர் ஒரு வணிகர் மட்டுமே என்று நிறுவ முயற்சிகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால், Ben Johnson மற்றும் Robert Greene போன்ற பெரும் இலக்கிய ஆளுமைகள் தங்களது விமர்சனங்களில் ஷேக்ஸ்பியரை திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.

ஷேக்ஸ்பியர் படைப்புலகத்தில் கவிதைக்கு என்ன இடம்?
150 கவிதைகள். sonnet வகையைச் சார்ந்தவை. பெரும்பாலும் காதல் கவிதைகள். அதிலே பல கவிதைகள் காலத்தை வென்று விட்டன என்ற மிக எளிதாகச் சொல்லலாம். கவிதைகளிலே குறிப்பிடப்படும் அந்தப் பெண் யார் என்பது பற்றி தனியாக ஒரு பெரிய விமர்சனக் குழு சில நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. அது ஒரு பெண்ணைப் பற்றியல்ல; ஷேக்ஸ்பியர் ஓரினச் சேர்க்கையாளர். அவர் கவிதைகளில் ஏக்கமாக குறிப்பிடுவது அந்த ஆண் நண்பரைத்தான் என்ற இரைச்சலும் ஷேக்ஸ்பியரைப் பற்றி படிக்கையில் கேட்டாக வேண்டும்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
ஆங்கில மொழி மட்டுமல்லாது, உலகத்தின் எந்த மொழியிலும் அதிகம் பார்க்கப் பட்டதும், படிக்கப் பட்டதும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்தான் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளலாம். உலகத்தின் பெரும்பாலான மொழிகளில் இவைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் சமகாலத்தவரோடு ஒப்பு நோக்கையில், இவர் பல்திறம் கொண்டவர். இன்பியல், துன்பியல் மற்றும் வரலாற்று நாடகங்களை ஒரே மாதிரியான நேர்த்தியில் எழுதியிருக்கிறார். இந்த versatility மற்றவரிடம் பார்க்கக் கூடுவதில்லை. ஜனரஞ்சகமும், செவ்வியல் தன்மையும் ஒரே நேரத்தில் இவரால் சாதிக்க முடிந்தவை. இயக்குனர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சேர்ந்த கலவைத் தன்மையை ஒரு இயக்குனர் ஒரே நேரத்தில் சாதிக்க முடிந்தால், அப்படிப்பட்ட ஒருவரை நாம் பார்த்து, வரலாற்றில் பின் நகர்ந்து ஷேக்ஸ்பியரை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஷேக்ஸ்பியர் இறந்தாரா?
ஷேக்ஸ்பியர் 1616-ம் ஆண்டு தனது 52 வயதில் மரித்தார். எதனால் இறந்தார் என்பது பற்றி சர்ச்சைகள் நிறைய உண்டு. குடிகாரனாக மாறிப்போன ஷேக்ஸ்பியர் மிதமிஞ்சி குடித்து குழிக்குப் போனார் என்ற செய்தியும் காற்றில் மிதக்கிறது.

இந்த செய்தியைப் போலவே, அவரின் ஆயிரமாயிரம் வரிகள் காற்றில் மிதந்து, துன்பம் நேர்ந்தவர்களுக்கு யாழெடுத்து இன்பம் சேர்த்துக் கொண்டேயிருக்கின்றன. இவரைக் காப்பியடித்து, எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நாடகங்களும், கதைகளும், சினிமாக்களும் தங்கள் கைகளிலும் யாழ் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு இன்பம் சேர்க்க முயன்று கொண்டிருப்பது இவருக்கு பெருமையே.

0 Responses so far.

Post a Comment